தர்மபுரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு


தர்மபுரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2019 11:00 PM GMT (Updated: 23 July 2019 8:12 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க அறிவுறுத்தினார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சக இணைச்செயலாளர் இந்தர்தமீஜா தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த மத்திய ஆய்வுக்குழுவில் மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சக உழவர் நலத்துறை இயக்குனர் எஸ்.ருக்மணி, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக துணை செயலாளர் சரங்கதர் நாயக், மத்திய சுற்றுச்சூழல்வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக துணை செயலாளர் எஸ்.கே.பரிடா, மத்திய ஜல்சக்தி அமைச்சக நீர்வளம் நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்ச்சி துறை தொழில்நுட்ப அலுவலர்கள் எம்.கே.ஜோஸ், ஆர்.ஆறுமுகம், எஸ்.கே.சுக்லா, விஞ்ஞானிகள் ஜோசப், விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த குழுவினர் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் நல்லம்பள்ளி தாலுகா ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி காமராஜ் நகரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டப்பணியாளர்களைக் கொண்டு 2000 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படும் பணியினை பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள கோவிலில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்பின் செயல்பாட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த மத்திய குழுவினர் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு குறும் படத்தையும் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தை மத்திய குழுவினர் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

5 லட்சம் மரக்கன்றுகள்

ஆய்வு கூட்டத்தில் மத்தியகுழுவின் தலைவர் இந்தர் தமீஜா பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 26-ந்தேதி வரை பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறோம். மழை நீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. தர்மபுரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் இன்னும் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாகவே உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லா கான், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, மகளிர் திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்ட நிர்வாக இயக்குனர் சங்கரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story