ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2019 11:00 PM GMT (Updated: 24 July 2019 7:00 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்தது.

திருவாரூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதி்க்கும் ஹைட்ரோ கார்பன் தி்ட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடத்துவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்தது.

அதன்படி நேற்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜ் தலைமை தாங்கினார். தேசியக்குழு உறுப்பினர் முருகேசு, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து அனைவரும் தபால்களை பிரதமர் முகவரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் சரவணன், நல்லசுகம், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், பாப்பையன், பிச்சமுத்து, சிவரஞ்சித், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story