விவசாயிகளுக்கு மண்வள மேம்பாடு குறித்து விழிப்புணர்வு


விவசாயிகளுக்கு மண்வள மேம்பாடு குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 24 July 2019 10:15 PM GMT (Updated: 24 July 2019 8:03 PM GMT)

அரியலூர் மாவட்டம் பொட்டவெளி கிராமத்தில் மண் வளஅட்டை இயக்கம் மற்றும் மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் பொட்டவெளி கிராமத்தில் மண் வளஅட்டை இயக்கம் மற்றும் மண்வள மேம்பாடு குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூவலிங்கம் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட வேளாண்மை அலுவலர் சுகந்தி பேசுகையில், மண்பரிசோதனை நிலைய அலுவலர்களால் பொட்டவெளிகிராமத்தில் விவசாயிகளின் நிலங்களில் மண் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. மண் மாதிரிகள் அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் ஆய்வு முடிவுகள் மண்வள அட்டை இயக்க இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் மண்வள அட்டையை இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மண் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பயிருக்கு தேவையான உயிர் உரம், இயற்கை உரங்கள் மற்றும் ரசாயன உரங்கள் இடுதல் குறித்து செயல் விளக்கம் அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் உரச்செலவை குறைத்து அதிகப்படியான மகசூல் பெறலாம். செயல்விளக்கத்திற்கு ஒரு எக்டருக்கு ரூ.2,500 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது என்றார். தொடர்ந்து வேளாண்மை அலுவலர் (விவசாயம்) சவீதா கோடைஉழவின் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் இளங்கோவன் செய்திருந்தார்.

Next Story