பள்ளிக்கரணை குப்பை கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


பள்ளிக்கரணை  குப்பை கொட்டும் வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
x
தினத்தந்தி 25 July 2019 11:00 PM GMT (Updated: 25 July 2019 7:26 PM GMT)

பள்ளிக்கரணையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகம் செயல்பட்டு வருகிறது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம், பள்ளிக்கரணையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த குப்பை கொட்டும் வளாகத்தில் பயனுள்ள பொருட்களை பிரித்தெடுத்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கான ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு 250 கன மீட்டர் அளவுக்கு குப்பை பிரித்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளை நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது இந்த பணிகளை 4 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கமிஷனர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள 10 டன் கொள்ளளவு கொண்ட குப்பைகளை உரமாக்கும் நிலையங்களையும் கமிஷனர் பார்வையிட்டார். அதேபோல் ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணிகளையும், நங்கநல்லூரில் உள்ள குளத்தையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது என்ஜினீயர்கள் என்.மகேசன், வீரப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story