சுரண்டை அருகே பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை


சுரண்டை அருகே பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2019 9:45 PM GMT (Updated: 26 July 2019 8:06 PM GMT)

சுரண்டை அருகே ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரண்டை,

சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் தமிழ், உயிரியல், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கடந்த ஆண்டு முதல் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க கோரியும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரகேரளம்புதூர் தாசில்தார் ஹரிஹரன், பள்ளி தலைமை ஆசிரியை சாய்சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர்களை நியமிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் கூறினர்.

இதையடுத்து தாசில்தார் ஹரிஹரன் மாணவ பிரதிநிதிகள் 2 பேரை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்து சென்றார். அதன்பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story