மணப்பாறை அருகே நள்ளிரவில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது


மணப்பாறை அருகே நள்ளிரவில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 30 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 7:05 PM GMT)

மணப்பாறை அருகே நள்ளிரவில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தாதகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சோலைமலை. இவரது மனைவி லட்சுமி (வயது 22). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியான லட்சுமிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டது.

இதுகுறித்து மணப்பாறையில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு ஊழியர்கள் விரைந்து சென்று கர்ப்பிணியை ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆம்புலன்சில் பிரசவம்

கோவில்பட்டி சாலையில் உள்ள ஒரு பள்ளி அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது லட்சுமிக்கு பிரசவ வலி அதிகமானது.

நிலைமையை புரிந்து கொண்ட டிரைவர் முனியசாமி ஆம்புலன்சை மெதுவாக ஓட்ட அவசர கால மருத்துவ உதவியாளர் புஷ்பலதா பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் லட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயும்- சேயும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஓடும் ஆம்புலன்சில் திறம்பட செயல்பட்டு பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு லட்சுமியின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Next Story