சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2019 11:00 PM GMT (Updated: 4 Aug 2019 3:16 PM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டு உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019- 20 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெறலாம்.

மேலும் தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.sch-o-l-a-rs-h-ips.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2019-20-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

இக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான பள்ளி மாணவ, மாணவிகள் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரையும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணைய தளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டு உள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள விவரங்களை சான்று ஆவணங்களுடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்கள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு பள்ளி குறியீட்டு எண் அவசியமாகும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் www.minorityaffairs.gov.in/sche-mes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்து உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித் தொகையினை பெற உரிய காலத்திற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story