உணவு வணிகர்கள் உரிமம், பதிவுச்சான்று பெற வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்
உணவு வணிகர்கள் அனைவரும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெற வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உணவு வணிகம் மேற்கொள்பவர்களுக்காக இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் உணவு வணிகம் மேற்கொள்ளும் அனைத்து உணவு வணிகர்களும் உரிமம் அல்லது பதிவு செய்தல் அத்தியாவசிய ஒன்றாகும். இம்மாவட்டத்தில் மொத்த உணவு வணிக நிறுவனங்கள் 17,207 ஆகும். இவற்றில் 11.1 சதவீத உணவு வணிக நிறுவனங்கள் இதுவரை உரிமம் மற்றும் பதிவு பெறவில்லை.
WWW.foodlicensing.fssai.gov.in என்னும் இணையதள முகவரியில் உரிமம் மற்றும் பதிவுச்சான்று வேண்டி விண்ணப்பிக்கலாம்.உரிமம் மற்றும் பதிவுச்சான்றுக்கு விண்ண ப்பிக்கும் பொழுது அதற்குரிய தொகையை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
உணவு பாதுகாப்புதுறையின் உரிமம் மற்றும் பதிவுச்சான்று பெறாமல் உணவு வணிகம் மேற்கொள்வது சட்டப்படி குற்றமாகும். எனவே உணவு வணிகர்கள் தாங்களே முன்வந்து உடனடியாக தங்களது வணிகத்திற்கு உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்றிட வேண்டும்.
இதேபோல் உரிமம் மற்றும் பதிவை புதுப்பித்து கொள்ளவும், மாறுதல் செய்து கொள்ளவும் ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்தி உரிமம் மற்றும் பதிவு பெற்றுக்கொள்ளலாம். தவறினால் உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உரிமம் தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் களையோ, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story