குன்னூர் ஏல மையத்தில், ரூ.11¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை


குன்னூர் ஏல மையத்தில், ரூ.11¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை
x
தினத்தந்தி 4 Aug 2019 10:15 PM GMT (Updated: 4 Aug 2019 8:20 PM GMT)

குன்னூர் ஏல மையத்தில் ரூ.11¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனையானது.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தேயிலை விவசாயத்தை நம்பி ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்களாக மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் குன்னூரில் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி கடந்த 1, 2-ந் தேதிகளில் நடைபெற்ற ஏலத்துக்கு 17 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 11 லட்சத்து 52 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 53 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

ஏலத்தில் 14 லட்சத்து 62 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 87 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.11 கோடியே 74 லட்சம். ஏலத்தில் சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.261, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை ரூ.287 என இருந்தது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.63 முதல் ரூ.74 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரையும் ஏலம் சென்றது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.64 முதல் ரூ.72 வரையும், உயர் வகை ரூ.100 முதல் ரூ.116 வரையும் விற்பனையானது. அடுத்த ஏலம் வருகிற 8, 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 16 லட்சத்து 52 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

Next Story