மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெற உத்தரவு


மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெற உத்தரவு
x
தினத்தந்தி 6 Aug 2019 10:45 PM GMT (Updated: 6 Aug 2019 1:30 PM GMT)

மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர்,

சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதி அறிவிக்கப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனை கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு இந்த விதி பொருந்தும்.

மருத்துவ கழிவுகளை கையாளும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விண்ணப்பித்து படிவம்–3 அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரத்தின் காலாவதி தேதியானது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் வழங்கப்படும் இசைவாணையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள மேற்குறிப்பிட்ட அனைத்து நிறுவனங்களும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமில்லாமல் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016–ன் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தையும் பெற வேண்டும். டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் முதன்மை பெஞ்ச், மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளுக்கு உட்பட தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story