பெரம்பலூரில் மாநில தேக்வாண்டோ போட்டி தொடங்கியது 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு


பெரம்பலூரில் மாநில தேக்வாண்டோ போட்டி தொடங்கியது 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Aug 2019 11:00 PM GMT (Updated: 10 Aug 2019 7:49 PM GMT)

பெரம்பலூரில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி நேற்று தொடங்கியது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான 32-வது ஆண்டு ஜூனியர், சீனியர்களுக்கான தேக்வாண்டோ போட்டிகள் பெரம்பலூர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. சங்கத்தின் மாவட்ட தலைவர் அரவிந்தன், துணை தலைவர் செல்லப்பிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர். துணை தலைவர் வரதராஜன், செயலாளர் நந்தகுமார் வரவேற்றனர்.

தேக்வாண்டோ போட்டியின் தேசிய நடுவரும், தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் பொதுச் செயலாளருமான செல்வமணி, தேக்வாண்டோ போட்டியின் தேசிய நடுவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் தேக்வாண்டோ பயிற்சியாளருமான தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஜூனியர் பிரிவில்...

இந்த போட்டியில், ஏற்கனவே மாவட்ட அளவில் நடத்தப்பட்ட 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஜூனியர் பிரிவில் குருக்கி (பைட்டிங்), பூம்சே ஆகியவற்றில் பல்வேறு எடை பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதன்படி பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இருந்து பல பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஆக்ரோஷமாக மோதினர். போட்டியில் முதலிடம் பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கமும், 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு வெள்ளிப்பதக்கமும், 3, 4-ம் இடங்களை பிடித்தவர்களுக்கு வெண்கலப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட உள்ளது.

சீனியர் பிரிவிற்கான போட்டிகள்

மேலும் மாவட்ட அளவில் 17 வயதிற்கு மேற்பட்ட சீனியர் பிரிவில் குருக்கி (பைட்டிங்), பூம்சே ஆகியவற்றில், 8 எடைப்பிரிவுகளில் முதல் 2 இடங் களை பிடித்த வீரர்- வீராங்கனைகளுக்கு மாநில அளவிலான போட்டிகள் இன்று நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேக்வாண்டோ போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்கள் தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story