பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 12 Aug 2019 9:45 PM GMT (Updated: 12 Aug 2019 7:52 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஆம்பூர், 

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகையை யொட்டி ஆம்பூர் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்று காலையில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு தொழுகை நடைபெறும் இடங்களுக்கு சென்றனர்.

ஆம்பூர் ஈத்கா மைதானத்தில் ஜாமியா மசூதி இமாம் கதீப் சலாவுத்தீன் பக்ரீத் சிறப்பு சொற் பொழிவும், அதனை தொடர்ந்து சின்னமசூதி இமாம் மவுல்வி குல்ஜார் அஹமத் சிறப்பு தொழுகையும் நடத்தினர்.

மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மொஹியத்தீன்புரா மசூதி இமாம் ஜியாவுத்தீன் சிறப்புரை சொற் பொழிவும், புதுமனை மசூதி இமாம் மவுல்வி அல்லாபகஷ் சிறப்பு தொழுகையும் நடத்தினர்.

மஜ்ஹருல் உலூம் மைதானத்தில் சவுக் மசூதி இமாம் இம்தியாஸ் அஹமத் சொற் பொழிவும், ரெட்டித்தோப்பு அக்பரி மசூதி இமாம் முஹம்மத் தவுபீக் சிறப்பு தொழுகையும் நடத்தினர்.

3 இடங்களிலும் நடந்த இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடந்த இடங்களில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதேபோல் ஆம்பூர் அருகே உள்ள சோலூர், உமராபாத், துத்திப்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

வேலூர் டவுனில் ராமநாயக்கன்பாளையம் பெரிய மசூதி, சின்ன மசூதி, கஸ்பா மசூதி, டிட்டர்லைன் மசூதி, சைதாப்பேட்டை மக்கா மசூதி, கானாறு மசூதி, மக்கானில் உள்ள மசூதி, ஈத்கா மைதானம் மற்றும் வேலூரில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை செய்தனர்.

தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை கட்டித்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் இறைச்சி (குர்பானி) வழங்கினார்கள்.

பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் சிலர் சிறப்பு தொழுகை நடத்த போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் காந்தி சிலையின் அருகே கோட்டைக்கு செல்லும் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

அதிகாலை 5 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கோட்டையின் நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோட்டைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே கோட்டையின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Next Story