நெடுவாசலில் நிதி ஒதுக்கீடு செய்தும் சீரமைக்கப்படாத வாய்க்கால்


நெடுவாசலில் நிதி ஒதுக்கீடு செய்தும் சீரமைக்கப்படாத வாய்க்கால்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 8:05 PM GMT)

நெடுவாசலில் நிதிஒதுக்கீடு செய்தும், சீரமைக்கப்படாத வாய்க்காலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம்,

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன்விடுதியில் கல்லணை கால்வாயில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், குரும்பிவயல், முடுக்குவயல் வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசனத்திற்காக கொண்டுவரப்படுகிறது. இந்த வாய்க்கால் சீரமைப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பாலும் காணாமல் போய் இருந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு நெடுவாசல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் பாசனம் பெறும் விவசாயிகள் இணைந்து வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து தண்ணீரை கொண்டு வந்தனர். அந்த வாய்க்காலில் தண்ணீர் வந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதில் இன்னும் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் கிராம விவசாயிகள், இளைஞர் மன்றத்தினர் சம்பந்தப்பட்ட வாய்க்காலை மறு சீரமைப்பு செய்யவும், சீரமைக்காமல் உள்ள வாய்க்காலை சீரமைக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ரூ.3 லட்சம் ஒதுக்கீடு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கல்லணை கோட்ட அதிகாரிகள் சில மாதங்களுக்கு ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தனர். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது காவிரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சில நாட்களுக்குள் கல்லணையில் தண்ணீர் நிரம்பி உடனடியாக தண்ணீர் திறந்தால் சீரமைக்கப்படாமல் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வராமல் போகும்.

இதனால் வாய்க்கால் சீரமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தி உடனடியாக தூர்வாரினால் பாசனத்திற்கும், நெடுவாக்குளம், உள்ளிட்ட குளம், ஏரிகளில் தண்ணீரை நிரப்பலாம். அதனால் தான் நெடுவாக்குளத்தை நெடுவாசல் நீர்பாசனக்குழுவினரே சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர். எனவே உடனடியாக பணிகள் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் வந்த பிறகு பணிகள் முழுமையாக செய்வது கடினமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story