திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக 824 குளங்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு - அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் தகவல்


திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக 824 குளங்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு - அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:37 PM GMT)

திருப்பூர் மாவட்டம் முழுவதும் முதல் கட்டமாக 824 குளங்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குளம், குட்டைகள் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மழைநீர் சேகரிப்பு, நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், கழிவு நீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் உபயோகிப்பதை பெருமளவில் ஊக்கப்படுத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊருணிகள் போன்றவற்றை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில், அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 98 குளங்களும், தாராபுரத்தில் 48 குளங்களும், குடிமங்கலத்தில் 74 குளங்களும், காங்கேயத்தில் 45 குளங்களும், குண்டடத்தில் 77 குளங்களும், மடத்துக்குளத்தில் 33 குளங்களும், மூலனூரில் 36 குளங்களும், பல்லடத்தில் 65 குளங்களும், பொங்கலூரில் 48 குளங்களும், திருப்பூரில் 39 குளங்களும், உடுமலையில் 118 குளங்களும், ஊத்துக்குளியில் 116 குளங்கள் மற்றும் வெள்ளகோவிலில் 27 குளங்கள் உள்பட திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 265 ஊராட்சிகளில் உள்ள 1525 குளங்கள் உள்ளன.

இந்த குளங்களில் முதற்கட்டமாக 824 குளங்களை தூர்வார இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த மாநில நிதியாக ஒரு குளத்திற்கு ரூ.1 லட்சமும், குளங்களில் சிறு குட்டை, சிறு குட்டைக்கு கட்டுமான பணிகள், நீர் உள்வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியிலிருந்து ரூ.2 லட்சம் என, 824 குளங்களுக்கு ரூ.24 கோடியே 72 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் எந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்படும். குளங்களை தூர்வாரி நீர் சேமிக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். இதனால், நீர் வளத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு நீர் வளத்தை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story