மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் மழை பாதித்த பகுதிகளில் எடியூரப்பா ஆய்வு


மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் மழை பாதித்த பகுதிகளில் எடியூரப்பா ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:56 PM GMT (Updated: 12 Aug 2019 11:56 PM GMT)

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-மந்திரி எடியூரப்பா ஆய்வு செய்தார்.

மைசூரு, 

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-மந்திரி எடியூரப்பா மங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மாலை மைசூருவுக்கு வந்தார். மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை பிரதாப் சிம்ஹா எம்.பி., கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், ஹர்சவர்தன் ஆகியோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் நஞ்சன்கூடுவுக்கு சென்ற எடியூரப்பா அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் அவர் மைசூருவுக்கு வந்தார். அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்றார்.

முன்னதாக மைசூரு விமான நிலையத்தில் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மைசூரு மாவட்டத்தில் ஏற்பட்ட உள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து கொண்டு உள்ளேன். முகாம்களில் தங்கி இருப்பவர்கள் பயப்பட வேண்டாம். அந்த மக்களுக்கு உதவி செய்ய நானும், எனது தலைமையிலான அரசும் தயாராக உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு உள்ளேன். வீடுகளை இழந்தவர்கள் மீண்டும் வீடு கட்டும் வரை வாடகை வீட்டில் தங்கினால் அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படும்.

இடிந்த வீடுகளை சரி செய்ய ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க கலெக்டரிடம் கூறி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story