காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு


காஷ்மீர் விவகாரம்: ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு
x
தினத்தந்தி 16 Aug 2019 11:45 PM GMT (Updated: 16 Aug 2019 10:06 PM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவு தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 அங்கன்வாடி மையங்களையும் திறந்து வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமையை கருத்தில் கொண்டு தான் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார். வீடு இருந்தால் தான் கூரை என்று 1962-ம் ஆண்டு அண்ணா கூறியுள்ளார். மேலும் சீனா படை எடுத்த போது திராவிட நாடு கொள்கையை ஒத்திவைப்பதாகவும் அண்ணா தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அண்ணா ஏற்கனவே கூறிய கருத்தை ரஜினிகாந்த் அவரது பாணியில் சொல்லி இருக்கிறார். எனவே ரஜினிகாந்தின் கருத்து வரவேற்கத்தக்கது.

மதுரை அருகே சத்தியமூர்த்தி நகரில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக இது வரை எனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும் இரு தரப்பு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்திவரதரை குளத்திற்குள் வைத்து வழிபடுவதா, கோவிலில் வைத்து வழிபடுவதா என்பது குறித்து இந்து சமய பெரியோர்கள் வகுத்துள்ள சம்பிரதாயம், சாஸ்திரப்படி முடிவு செய்யப்படுகிறது. அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்பது இந்து மக்களின் ஆதங்கமாக இருந்தாலும் சம்பிரதாய, சாஸ்திரப்படி தான் முடிவு செய்யப்படுகிறது. அதனை அரசு நிறைவேற்றுகிறது. மாணவர்கள் கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தான் பதில் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story