ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி கைது


ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி கைது
x
தினத்தந்தி 17 Aug 2019 10:30 PM GMT (Updated: 17 Aug 2019 7:12 PM GMT)

பவானிசாகர் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே உள்ள தயிர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கொளந்தசாமி என்கிற சின்னசாமி (வயது 51). இவருடைய மனைவி மீனா என்கிற சகாயமேரி (40). இவர்கள் 2 பேரும் ஏலச்சீட்டு நடத்தி வந்தாக கூறப்படுகிறது. இவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த பலர் சீட்டு பணம் கட்டி வந்தனர்.

இந்த நிலையில் கொத்தமங்கலம் நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த மல்லிகா மற்றும் 5 பேர் பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், ‘சின்னசாமி மற்றும் அவருடைய மனைவி சகாயமேரி ஆகியோர் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தினர். இதில் நாங்களும் உறுப்பினர்களாக சேர்ந்து சீட்டுக்கு பணம் செலுத்தினோம்.

இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் சேர்ந்து ஏலம் கூறி எடுத்த எங்களுடைய சீட்டுக்கு பணம் தராமல் இழுத்தடித்து வருகிறார்கள். இதன்மூலம் அவர்கள் 2 பேரும் ரூ.12 லட்சம் மோசடி செய்து உள்ளனர். எனவே அவர்கள் 2 பேரிடம் இருந்து எங்களுடைய பணத்தை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சின்னசாமியும், சகாயமேரியும் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story