காதலியுடன் பேசியதால் ஆத்திரம்: ஓட்டுனர் பள்ளி பயிற்சியாளரை தாக்கி, காரை உடைத்த 4 பேர் சிக்கினர்


காதலியுடன் பேசியதால் ஆத்திரம்: ஓட்டுனர் பள்ளி பயிற்சியாளரை  தாக்கி, காரை உடைத்த 4  பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 17 Aug 2019 11:01 PM GMT (Updated: 17 Aug 2019 11:01 PM GMT)

காதலியுடன் பேசியதால் ஆத்திரம் ஓட்டுனர் பள்ளி பயிற்சியாளரை தாக்கி, காரை உடைத்த 4 பேர் சிக்கினர்.

ஆலந்தூர்,

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 26). இவர், பூந்தமல்லியில் உள்ள ஒரு நடன பள்ளியில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். அங்கு நடனம் கற்கவந்த கல்லூரி மாணவி ஒருவருடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த கல்லூரி மாணவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதம்பாக்கத்தில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஒன்றில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு, ஓட்டுனர் பள்ளி பயிற்சியாளர் ஹட்வினுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று தனது காதலியுடன், ஹட்வின் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த யுவராஜ், தனது நண்பர்களான பெரும்பாக்கத்தை சேர்ந்த சரவணன் (23), வினோத் (23), ராஜசேகர் (23) ஆகியோருடன் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு சென்று ஹட்வினை சரமாரியாக தாக்கினார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றையும் உருட்டுக்கட்டையால் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான சரவணன், வினோத், ராஜசேகர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

Next Story