காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் கைது
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:18 PM GMT)

காஞ்சீபுரம் அருகே தேங்காய் வியாபாரி கொலை வழக்கில் 9 பேர் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த கோவிந்தவாடியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35). இவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி புருஷோத்தமன் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் புருஷோத்தமன் குடிபோதையில் நேற்று முன்தினம் காலை தனது நண்பர்களுடன் கோவிந்தவாடி கோவில் அருகே ரோட்டில் வருவோர், செல்வோரை கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

இதில் கோவில் அருகே தேங்காய் கடை வைத்திருக்கும் கோவிந்தவாடி காவாங்கரையை சேர்ந்த தனஞ்செழியன் (55) படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர்கள் வெட்டியதில் கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த தேவகி (65), சுபாஷினி (40), ராதாம்மாள் (50), விஸ்வநாதன் (55), யசோதரன் (25), தட்சிணாமூர்த்தி (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ரவுடி புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க தனி போலீஸ் படையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நியமித்தார்.

பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து ரவுடி புருஷோத்தமன் மற்றும் அவரது நண்பர்களான ஊரேறிச்சத்திரத்தை சேர்ந்த மதிவாணன் (23), வள்ளூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (25), சிம்மசமுத்திரத்தை சேர்ந்த ராஜா (21), சித்தேரிமேடு பகுதியை சேர்ந்த லோகேஷ் (20), கோவிந்தவாடியை சேர்ந்த சுதாகர் (23), விஜி என்ற விஜயகுமார் (23), கூரம் பகுதியை சேர்ந்த பிரபு (27), ரெட்டேரியை சேர்ந்த விஜி (23) ஆகியோரை கைது செய்தார்.

Next Story