நாகர்கோவிலில் தொட்டிப்பாலம் பூங்காவில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


நாகர்கோவிலில் தொட்டிப்பாலம் பூங்காவில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:52 PM GMT)

தொட்டிப்பாலம் கட்டிய காமராஜருக்கு அங்குள்ள பூங்காவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் அதிகாரிகள் பேசும் போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு போதுமான அளவு மழை பெய்யவில்லை. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 817 மில்லி மீட்டர் மழை பெய்யும். இந்த ஆண்டு 555.54 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. இதேபோன்று தென்மேற்கு பருவ மழை வழக்கமாக 449 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். அதுவும் இந்த ஆண்டு குறைந்து தற்போது வரை 390 மில்லி மீட்டர் தான் பெய்திருக்கிறது. அப்படி இருந்தும் பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளன.

குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறும். தற்போது 5 ஆயிரத்து 130 ஏக்கர் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது. சில இடங்களில் சாகுபடி செய்யாமல் விட்டுள்ளனர். அந்த பகுதிகளில் இனி சாகுபடி செய்தால் குறைந்த வயதுடைய நெல் பயிரிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாத்தூர் தொட்டிப்பாலம்

பின்னர் வருவாய் அதிகாரி ரேவதி பேசும் போது, கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பாக 65 மனுக்கள் வந்தன. இதில் 55 மனுக்களில் கூறப்பட்டுள்ள நீர்நிலைகளை அளவீடு செய்யும் பணி நடக்கிறது. 8 இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன என்றார்.

இதையடுத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் கூறிய கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

பேச்சிப்பாறை அணை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் மக்கள் வீடுகளை இழந்து அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை மற்றும் இரட்டை ரெயில் பாதை திட்டங்கள் காரணமாக குளங்கள், கால்வாய்களில் மணல் கொட்டப்படுகின்றன. எனவே நீர் நிலைகளில் கொட்டப்படும் மணலை அகற்ற வேண்டும். மாத்தூர் தொட்டிப்பாலம் கட்டியது முதல் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. எனவே தொட்டிப்பாலத்தை சீரமைப்பது அவசியம். மேலும் தொட்டிப்பாலத்தை கட்டிய காமராஜருக்கு அங்கு கல்வெட்டு அமைப்பதுடன், பூங்காவில் மணி மண்டபமும் கட்ட வேண்டும். அதோடு தொட்டிப்பாலம் எந்த பஞ்சாயத்துக்குட்பட்டது என்று அளவீடு செய்து நிர்ணயிக்க வேண்டும். இதே கோரிக்கைகளை பல முறை கூறியுள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வருவாய் அதிகாரி பதில்

இதற்கு வருவாய் அதிகாரி ரேவதி பதில் அளித்து பேசுகையில், “பேச்சிப்பாறை அணை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 46 வீடுகள் அகற்றப்பட்டு உள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு பட்டா நிலம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு வீடுகளும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 4 வழிச்சாலை மற்றும் இரட்டை ரெயில் பாதை பணிகளால் நீர்நிலைகளில் மணல் கொட்டுவது தொடர்பாக கலெக்டரிடம் ஆலோசனை நடத்தப்படும். மாத்தூர் தொட்டிப்பாலம் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

முன்னதாக பேச்சிப்பாறை அணையை சீரமைத்ததற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கும் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுப்பக்குழி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மணிகண்டேஸ்வர குமாரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story