மானாமதுரை அருகே 4 மோட்டார்சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல்; 6 பேர் காயம்


மானாமதுரை அருகே 4 மோட்டார்சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல்; 6 பேர் காயம்
x
தினத்தந்தி 25 Aug 2019 9:45 PM GMT (Updated: 25 Aug 2019 8:14 PM GMT)

மதுரை வாலிபர்கள் சென்ற 3 மோட்டார்சைக்கிளும் மற்றொரு மோட்டார்சைக்கிளும் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்தனர். இதில் ஒரு மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

மானாமதுரை,

மதுரை சின்னசொக்கி குளத்தை சேர்ந்த சரவணன்(22), செல்லூரை சேர்ந்த ஜமீன்மைதீன்(25), பாரதி(25), சசிபிரசாத்(22), பி.பி.குளம் திருக்குமரன்(24), அண்ணாநகர் கார்த்திக்(25) ஆகியோர் 3 மோட்டார்சைக்கிள்களில் ராமேசுவரம் சென்று இருந்தனர்.

நேற்று மாலை அனைவரும் மதுரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

4 வழிச்சாலையில் மானாமதுரை ராஜகம்பீரம் அருகே 3 வாகனங்களும் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. அப்போது எதிர்திசையில் முத்தனேந்தலை சேர்ந்த சாகுல் அமீது என்பவரது மகன் சிக்கந்தர் சேட்(26) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக சிக்கந்தர்சேட்டின் மோட்டார்சைக்கிளும் மதுரை நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. அதனைதொடர்ந்து நிலைகுலைந்து அடுத்தடுத்து மற்றவர்களின் மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மதுரை நோக்கி வந்தவர்களில் திருக்குமரன் தவிர மற்ற 5 பேரும் பலத்த காயம் அடைந்தார்கள். சிக்கந்தர் சேட்டுக்கு கால் முறிந்து போனது. மேலும் மோதிய வேகத்தில் அவரது மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. விபத்தை கண்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Next Story