சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.272 கோடி அதிகரிப்பு: கவர்னர் உரையில் தகவல்


சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.272 கோடி அதிகரிப்பு: கவர்னர் உரையில் தகவல்
x
தினத்தந்தி 26 Aug 2019 11:15 PM GMT (Updated: 26 Aug 2019 7:21 PM GMT)

சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வருவாய் ரூ.272 கோடி அதிகரித்துள்ளதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் கவர்னர் கிரண்பெடி ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

விவசாயம் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இயற்கை விவசாயத்தை அரசு பெரிதும் ஊக்குவித்து வருகிறது. அதன்படி இயற்கை விவசாயம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணும்பொருட்டு ரூ.89.83 கோடி செலவில் விவசாய தொழிலில் தக்க எந்திரங்களை உபயோகித்தல், மானிய விலையில் இடுபொருட்கள் கிடைக்க செய்தல், விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை நிலை நிறுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பயிர் உற்பத்தி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தேவையான மானிய விலையிலான அத்தியாவசியமான வேளாண் இடுபொருட்கள், அட்டவணை இன விவசாயிகளுக்கு ரூ.67 லட்சத்து 30 ஆயிரம், இதர விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 18 லட்சமும் புதுச்சேரி பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. காரைக்கால் பகுதியில் 2017-18ம் ஆண்டில் குறுவை நெல் சாகுபடி செய்த 609 விவசாயிகளுக்கு அறுவடைக்கு பிந்தைய மானியமாக ரூ.31 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய 22 திட்டங்களை ரூ.9 கோடியே 48 லட்சம் செலவில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுவை தட்டாஞ்சாவடி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேசிய வேளாண் விளைபொருட்கள் சந்தை திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்பு குழுவை சேர்ந்த 110 பெண் உறுப்பினர்களுக்கு தேனீ வளர்ப்பு திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தேனீ வளர்க்க ஆவன செய்யப்பட்டுள்ளது. மேலும் தேனீ வளர்ப்பிற்கான கருவிகள் 40 சதவீத மானியத்தில் வழங்கிடவும், வங்கிகள் மூலம் கடன் வசதி பெற்றிடவும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போதுள்ள பால் உற்பத்தி ஆலையை நவீனமயமாக்கும் பொருட்டு ரூ.34 கோடி செலவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கறவை பசுக்களின் உற்பத்தி திறன் மற்றும் சுகாதார நிலை குறித்த தகவல்களை சேகரிக்க உதவியாக 12 இலக்க தனித்தன்மையுடைய அடையாள எண் கொண்ட தோடினை மாடுகளின் காதில் பொருத்தும் திட்டம் புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முருங்கப்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை உதவி மையம் விரைவில் திறக்கப்படும். ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு ரூ.12 கோடி உதவிக்கொடை வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் முன்பிருந்த 60 இடங்கள் 80 இடங்களாக அதிகரிக்கப்பட்டன.

மாநிலத்தின் சொந்த வருவாயில் வணிகவரித்துறையின் பங்கு 45 சதவீதமாக உள்ளது. 2018-19ம் ஆண்டில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகை உள்பட வணிக வரித்துறை மூலம் ரூ.2,131 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டு வருவாயான ரூ.1,859 கோடியை விட ரூ.272 கோடி கூடுதலாகும்.

இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Next Story