கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பப்பாளிகள்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பப்பாளிகள்
x
தினத்தந்தி 2 Sep 2019 9:45 PM GMT (Updated: 2 Sep 2019 3:45 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பப்பாளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

உப்புக்கோட்டை,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான உப்புக்கோட்டை, பாலார்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் முல்லைப்பெரியாறு தண்ணீரின் மூலம் நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர பப்பாளி சாகுபடியிலும் விவசாயிகள் களம் இறங்கியுள்ளனர்.

பப்பாளி கன்றுகள் நடவு செய்த நாளில் இருந்து 7 மாதங்களுக்குள் விளைச்சல் அடைந்து விடுகிறது. 2 வாரத்துக்கு ஒருமுறை காய்கள் பறிக்கலாம். ஒரு ஆண்டு வரை பப்பாளி மரங்கள் மூலம் மகசூல் கிடைக்கும். செலவு குறைவாக இருப்பதாலும், நன்கு விளைச்சல் அடைவதாலும் விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைச்சல் அடையும் பப்பாளிகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. பப்பாளியில் இருந்து மருந்து தயாரிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

ஒரு கிலோ பப்பாளி ரூ.30 முதல் ரூ.40 வரை வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு கட்டுப்படியாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story