நிலச்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணி மந்தம்; மலைப்பாதையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்


நிலச்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணி மந்தம்; மலைப்பாதையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Sep 2019 11:15 PM GMT (Updated: 7 Sep 2019 8:19 PM GMT)

நிலச்சரிவு காரணமாக துண்டிக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணி மந்தமாக நடை பெறுவதால் மலைப் பாதையில் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த மாதம் தொடர் கனமழை பெய்தது. இதனால் 2 வாரங்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதித்தது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டது. கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் சாலையில் கேரள மாநில பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு சாலை உடைந்தது. மேலும் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது. இதன் காரணமாக கூடலூர்-மலப்புரம் இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொருளாதார ரீதியாக பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராட்சத பாறைகளை வெடி வைத்து மற்றும் அறுத்து அகற்றும் பணியில் கேரள அதிகாரிகள் மேற்பார்வையில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி மந்த நிலையில் நடந்து வருகிறது.

சாலையில் கிடக்கும் ஒவ்வொரு பாறைகளும் 20 அடி உயரங்கள் கொண்டதாக உள்ளது. கனமழையால் சாலை முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் குறைந்த சக்தி கொண்ட வெடிகளை வைத்து பாறைகளை உடைத்து வருகின்ற னர். ஆனால் பாறைகளை உடைப்பதில் கடும் சவாலாக உள்ளது. இதனால் பாறைகளை அகற்ற இன்னும் சில வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1 மாதமாக கூடலூர்-மலப்புரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் மலைப்பாதையில் நடந்து செல்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்கும் செல்லும் நிலை உள்ளது. கடந்த 1 மாதமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடலூர்-கேரள எல்லையில் பல கி.மீட்டர் தூரம் சிறிய ரக வாகனங்களில் பயணம் செய்கிறோம். அதன்பின்னர் ராட்சத பாறைகள் விழுந்து கிடக்கும் சில கி.மீட்டர் தூரம் நடந்து செல்ல முடியாததால் நிலச்சரிவுகள் ஏற்பட்ட வனத்துக்குள் நடந்து சென்று கேரள எல்லையை அடைகிறோம். இச்சாலை துண்டிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story