குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பூட்டி சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Sep 2019 10:00 PM GMT (Updated: 7 Sep 2019 8:35 PM GMT)

சுவாமிமலை அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவாமிமலை,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் பல நாட்களாக குடிநீர் வராமலும், தெரு மின் விளக்குகள் எரியாமலும் இருந்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இழுத்து பூட்டினர். பின்னர் ஊராட்சி எழுத்தரையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்தும், குடிநீர் வழங்ககோரியும் இன்னம்பூர் மெயின் ரோட்டில் திடீரென கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்க வேண்டும். மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story