ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் கலெக்டர் ஷில்பா தகவல்


ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 10 Sep 2019 10:15 PM GMT (Updated: 10 Sep 2019 8:41 PM GMT)

ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

நெல்லை, 

ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜெருசலேம் புனித பயணம்

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-2020-ம் ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்தலகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இந்த புனித பயணம் இந்த மாதம் (செப்டம்பர்) முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

கால அவகாசம்

இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்க காலக்கெடு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டிடம் (1-வது தளம்), சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story