பழமையான நீராவி என்ஜினை புனரமைத்து இயக்க முடிவு குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது


பழமையான நீராவி என்ஜினை புனரமைத்து இயக்க முடிவு குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
x
தினத்தந்தி 10 Sep 2019 11:00 PM GMT (Updated: 10 Sep 2019 9:54 PM GMT)

பழமையான நீராவி என்ஜின் புனரமைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த என்ஜினை குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குன்னூர், 

பழமையான நீராவி என்ஜின் புனரமைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த என்ஜினை குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மலை ரெயில் சேவை

நீலகிரி மலை ரெயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. இதையொட்டி மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை மலைகளை குடைந்து குகை அமைத்து ரெயில் பாதை அமைக்கப்பட்டது. குறிப்பாக மேட்டுப்பாளையம் குன்னூர் ரெயில் பாதையில் கல்லார் முதல் குன்னூர் வரை ரெயிலின் பாதுகாப்பிற்காக பல்சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கால கட்டத்தில் மலை ரெயில்கள் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டன.

இந்த என்ஜின்களில் எக்ஸ் 37384 என்ற எண் கொண்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது. இந்த என்ஜின் 1918-ம் ஆண்டு நீலகிரி மலை ரெயில் சேவையில் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் குன்னூர்-ஊட்டி மற்றும் ஊட்டி-குன்னூர் இடையே டீசல் என்ஜின்கள் மலை ரெயிலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

நிலக்கரி நீராவி என்ஜின்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே இயக்கப்பட்டு வந்த நிலக்கரி நீராவி என்ஜின்களுக்கு பதிலாக பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின்கள் இணைக்கப்பட்டன. பழமையான எக்ஸ் 37384 நிலக்கரி நீராவி என்ஜினை காட்சி பொருளாக வைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பழமையான நிலக்கரி நீராவி என்ஜினை இயக்க வேண்டும் என்று ரெயில்வே வாரியத்திடம் மனு கொடுத்தனர். இதன்படி காட்சி பொருளாக வைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

புனரமைத்து இயக்க முடிவு

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி எக்ஸ் 37384 எண் கொண்ட நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் பழமையான நிலக்கரி நீராவி என்ஜினை புனரமைத்து இயக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் அந்த என்ஜின் நேற்று குன்னூர் லோகோ பணிமனையில் இருந்து பர்னஸ் ஆயில் என்ஜின் மூலம் இணைக்கப்பட்டு மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே என்ஜின் பணிமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story