நினைவு தினத்தையொட்டி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


நினைவு தினத்தையொட்டி பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 8:20 PM GMT)

பாரதியார் நினைவு தினத்தையொட்டி மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை,

மகாகவி பாரதியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவர் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும், மாணவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை அமுதசுரபி கலைமன்றம் சார்பில் பாரதியார் நினைவு தின நிகழ்ச்சி சேதுபதி பள்ளியில் நடந்தது. மன்ற செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள், சங்கத்தலைவர் சாமிதுரை, பள்ளி தாளாளர் பார்த்தசாரதி ஆகியோர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடமணிந்து வந்தனர். அவர்களுக்கு மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், பாரதியாரின் கவிதை புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் புலவர் சங்கரலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன், மன்ற துணை தலைவர் தங்கமணி, துணை செயலாளர்கள் முரளி, சிவசங்கர குமார், சுந்தரேசன், பொருளாளர் லட்சுமணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், பாரதியாரை தேசிய கவியாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும், மதுரையில் பாரதியாருக்கு ஆளுயர சிலை அமைக்க வேண்டும் என மாநில அரசையும் வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் பாரதியார் நினைவு தினக்கூட்டம், மதுரை டி.பி.கே. ரோட்டில் உள்ள நற்பணி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மன்ற தலைவர் சொக்கலிங்கம் ‘கவலையில்லா கவிஞன்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். கூட்டத்தில் அண்ணாமலை, ராஜமாணிக்கம் உள்பட மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக பாரதியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில் வண்டியூர் மாணிக்கராஜ் நன்றி கூறினார்.

இதேபோல் பல்வேறு அமைப்பினரும், பள்ளிகளில் மாணவர்களும் பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story