மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வேண்டும் தசரா விழாவுக்கு மட்டும் தான் சோமண்ணா பொறுப்பு மந்திரியா? குமாரசாமி கேள்வி


மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வேண்டும் தசரா விழாவுக்கு மட்டும் தான் சோமண்ணா பொறுப்பு மந்திரியா? குமாரசாமி கேள்வி
x
தினத்தந்தி 12 Sep 2019 10:30 PM GMT (Updated: 12 Sep 2019 5:27 PM GMT)

மைசூரு தசரா விழாவுக்கு மட்டும் தான் சோமண்ணா பொறுப்பு மந்திரியா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

மைசூரு, 

மைசூரு தசரா விழாவுக்கு மட்டும் தான் சோமண்ணா பொறுப்பு மந்திரியா? என்று குமாரசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று மைசூருவுக்கு வந்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், சொத்துக்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு, குடியிருக்க வீடுகளை கட்டி கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்யாமல் மந்திரி சோமண்ணா, தசரா விழாவிற்கு மட்டும் பொறுப்பு மந்திரியாக உள்ளார்.

தசரா விழாவுக்கான பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்தால் அவர்களே அனைத்து பணிகளையும் செய்து கொள்வார்கள். மந்திரி இங்கேயே இருந்து பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதலில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அந்தப்பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

தசரா விழாவுக்கு பொறுப்பு மந்திரியா?

மந்திரி சோமண்ணா, தான் செல்லும் இடங்களில் எல்லாம் தசரா விழாவை பொறுப்பேற்று நடத்துகிறேன் என்று கூறி வருகிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தசரா விழா தொடர்பாக கூட்டம் நடத்துகிறார். இது தேவையில்லாததது. அதற்கு பதிலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் இடங்களுக்கு சென்று அங்கு நிவாரண பணிகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி வீடுகள் இல்லாதவர்களின் பட்டியல் தயாரித்து, உடனே தற்காலிகமாக தங்குவதற்கு வீடுகளை கட்டித் தருவது பற்றி கவனம் செலுத்த வேண்டும். சோமண்ணா வீட்டு வசதித்துறை மந்திரியா? அல்லது மைசூரு தசரா விழாவுக்கு பொறுப்பு மந்திரியா? என்று பதில் அளிக்க வேண்டும்.

நாங்கள் தான் அனுப்பி வைத்தோம்

முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.வுமான ஜி.டி.தேவேகவுடாவை நாங்கள் தான் பா.ஜனதாவுடன் இருந்து தசரா விழா பணிகளை கவனிக்கும்படி அனுப்பி வைத்துள்ளோம். கடந்த ஆண்டு அவர் தான் மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்து தசரா விழாவை நடத்தினார். அதனுடைய நினைவு அவருக்கு இன்னும் போகவில்லை. அந்த நினைவிலேயே இருந்து, தசரா விழாவை தானே நடத்துகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் சோமண்ணாவுடன் இருந்து எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story