மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தியான மண்டபம் திறப்பு - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தியான மண்டபம் திறப்பு - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 6:47 PM GMT)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்துவைத்தார்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தியான மண்டப திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பங்காரு அடிகளார் முன்னிலையில் மண்டபத்தை திறந்துவைத்தார்.

பின்னர் அங்கிருந்த புகைப்படத் தொகுப்பு கலைக்காட்சி கூடத்தை பார்வையிட்ட கவர்னர், குத்துவிளக்கேற்றினார். விழாவில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் வெங்கடசாமி வரவேற்றுப்பேசினார்.

விழாவில் அறங்காவலர்கள் அன்பழகன் மற்றும் செந்தில்குமார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர்கள் ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, ‘பங்காரு அடிகளாரின் 50 வருட ஆன்மிக வாழ்க்கையை பாராட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி பத்மஸ்ரீ விருதை இந்த ஆண்டு வழங்கி கவுரவித்தது மிகச்சிறப்புக்குரியது. சாதி, மத பேதம் இன்றி பெண்கள் அனைவரும் கருவறைக்கு சென்று வழிபடுவது போற்றுதலுக்குரியது’ என்று கூறினார்.

முடிவில் இணைச்செயலாளர் சுரேந்திரநாத் நன்றி கூறினார். மாலையில் ஒலி ஒளி மற்றும் இசை நடன நீர் ஊற்றுக்காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை சித்தர்பீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story