குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற தொழிலாளி


குடும்பம் நடத்த வரமறுத்ததால் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 13 Sep 2019 9:45 PM GMT (Updated: 13 Sep 2019 7:46 PM GMT)

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை தொழிலாளி கத்தியால் குத்திக் கொன்றார்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் முத்துக் கண்ணன் (வயது 42). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அங்காளஈஸ்வரி (37). இவர்களுக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக, கடந்த 13 வருடங்களாக கணவன்- மனைவி பிரிந்து வாழ்ந்தனர்.

சீலையம்பட்டியில் உள்ள தனது தம்பி வீட்டில் 2 மகன்களுடன் அங்காளஈஸ்வரி வசித்து வந்தார். முத்துக்கண்ணனும் அதே பகுதியில் வசித்து வந்தார். கடந்த மாதம் அடிதடி வழக்கு ஒன்றில் சின்னமனூர் போலீசாரால் முத்துக்கண்ணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேனி சிறையில் அடைக்கப்பட்ட அவர் நேற்று ஜாமீனில் வெளிவந்தார்.

பின்னர் முத்துக்கண்ணன், அங்காளஈஸ்வரியின் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அவரை அழைத்தார். இதற்கு அங்காளஈஸ்வரி மறுப்பு தெரிவித்தார். அப்போது அங்காளஈஸ்வரிக்கும், முத்துகண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் முத்துக்கண்ணனை அங்காளஈஸ்வரி கீழே தள்ளிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்கண்ணன், அருகில் கிடந்த கத்தியை எடுத்து அங்காளஈஸ்வரியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அங்காளஈஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் முத்துக்கண்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இது குறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்காளஈஸ்வரியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்கண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story