கும்மிடிப்பூண்டி அருகே துப்பாக்கி முனையில் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது


கும்மிடிப்பூண்டி அருகே துப்பாக்கி முனையில் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 Sep 2019 11:15 PM GMT (Updated: 13 Sep 2019 8:20 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே துப்பாக்கி முனையில் தொழிலாளிகளிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து, 2 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் மேம்பாலம் அருகே கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் காயலார்மேடு கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர், தொழிலாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்து, துப்பாக்கி முனையில் அவர்களிடம் இருந்த ரூ.1,700 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து ஓடி விட்டனர்.

இது தொடர்பாக 2 பேரும் கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், தொழிலாளிகளிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் (வயது 30), சுண்ணாம்புகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (25) ஆகிய 2 பேரை நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள், ஒரு கார் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story