புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மாயமானவர் இலங்கை கோர்ட்டில் சரண் - பரபரப்பு தகவல்கள்


புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மாயமானவர் இலங்கை கோர்ட்டில் சரண் - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 10:19 PM GMT)

புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மாயமானவர் இலங்கை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் குறித்து பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

ராமநாதபுரம்,

இலங்கையில் கொழும்பு பர்கீசன்ரோடு பகுதியை சேர்ந்த தயானந்தா என்பவரின் மகன் சங்க சிரந்தா(வயது 33), அதே பகுதி முகமது ராசிக் மகன் முகமது சப்ராஸ் (36). இவர்கள் சட்டவிரோதமாக தமிழகம் வந்து ராமநாதபுரம் தங்கப்பாபுரம் பகுதியில் தங்கி இருந்தனர்.

அவர்களை ராமநாதபுரம் போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அவர்கள் மீதான குற்றச்சாட்டை திரும்ப பெறுவதாக கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு கடந்த மாதம் உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை புழல் சிறை கண்காணிப்பாளருக்கு கேணிக்கரை போலீசார் அனுப்பிவைத்தனர். குற்றச்சாட்டினை திரும்ப பெற்று வழக்கினை முடிப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்தினை சரிவர புரிந்துகொள்ளாமல், அவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவிக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதாக கருதிய புழல் சிறை அதிகாரிகள், 2 இலங்கை வாலிபர்களையும் விடுவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மாயமானார்கள்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் விடுவிக்கப்பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டது. அப்போது இருவரும் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இதுதொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து, பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

அப்போது இலங்கை வாலிபர்களை மீண்டும் பிடிக்க எடுத்து வரும் நடவடிக்கை குறித்து வருகிற 19-ந்தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து விடுதலையான 2 இலங்கை நபர்களும் கள்ளத்தனமாக இலங்கை சென்றுள்ளதாக தகவல் வெளியானது. 2 பேர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சங்கசிரந்தா, அங்கு தாதாக்களின் தலைவன் போன்று வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு சங்க சிரந்தாவின் தம்பி புத்தீகர் என்பவரை மற்றொரு ரவுடி கும்பல் கொலை செய்தது. இதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ப்ளு மெண்டல் பகுதியில் களுபோலே என்பவரை சங்க சிரந்தா துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததும், மேலும் பல கொலை, கொள்ளை சம்பவங்களில் போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இலங்கை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் சங்க சிரந்தா வக்கீலுடன் சென்று இலங்கை புதுக்கடை கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி காஞ்சனா நெரஞ்சனா சில்வா முன்னிலையில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதுதொடர்பான தகவல்கள் இலங்கையில் இருந்து தற்போது வெளியாகி உள்ளது. டிரைவர் சப்ராஸ் நிலை என்ன? என்று தெரியவில்லை. அது குறித்து இலங்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story