மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகருக்கு 27 வகை அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகருக்கு 27 வகை அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:30 PM GMT (Updated: 14 Sep 2019 6:20 PM GMT)

திருச்சி மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி மிக பிரமாண்ட ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையலிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.

27 வகையான அபிஷேகம்

மேலும் கடந்த 2-ந் தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி, நாகாபரண கணபதி, லஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூசிக கணபதி, இராஜ கணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருட கணபதி, சித்தி புத்தி கணபதி என்று 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. 13-ம் நாளான நேற்று பகல் 12 மணிக்கு மேல் மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும், மாணிக்க விநாயகர் மூலவருக்கும் திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி, சந்தனாதி தைலம், திரவிய பொடி, அரிசி மாவு, நெல்லி முல்லி பொடி, மஞ்சள் பொடி, குங்குமம், தேன், நெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், எலுமிச்சம்பழம், சாத்துக்குடி, கரும்புசாறு, திராட்சை, மாதுளை, அன்னாசிப்பழம், முப்பழம், பழவகைகள், அன்னாபிஷேகம், வெந்நீர், இளநீர், சந்தனம், சொர்ணாபிஷேகம், பன்னீா,் தண்ணீர் உள்பட 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்தை பார்த்து தரிசனம் செய்தனர்.

14-ம் நாளான இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 11 மணிக்கு மூலவர், உற்சவருக்கு திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story