திண்டிவனம் அருகே கார் மீது பஸ் மோதல்; விவசாயி பலி


திண்டிவனம் அருகே கார் மீது பஸ் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 15 Sep 2019 10:00 PM GMT (Updated: 15 Sep 2019 5:05 PM GMT)

திண்டிவனம் அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் விவசாயி பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டிவனம்,

செஞ்சி அருகே உள்ள தச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் குமார் (வயது 40), விவசாயி. இவர் தனது உறவினர்களுடன் சொந்த வேலை காரணமாக சென்னை படாளத்துக்கு சென்றார். அங்கு அவர் வேலையை முடித்து விட்டு மீண்டும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை குமார் ஓட்டினார்.

திண்டிவனம் அருகே சலவாதி கல்லூரி சாலை கூட்டுப் பாதையில் கார் திரும்பிய போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குமார் மற்றும் அவரது உறவினர்கள் பொன்பத்தியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாக்கியலட்சுமி (56), அவரது மகன் ஏழுமலை(27), முத்து மகன் மாரி(35) ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த குமார் உள்ளிட்ட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து பாக்கியலட்சுமி உள்ளிட்ட 3 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story