திருமருகல், சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம், கிராம மக்கள் மனு


திருமருகல், சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 16 Sep 2019 9:30 PM GMT (Updated: 16 Sep 2019 12:55 PM GMT)

திருமருகலில் உள்ள சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  கலந்து கொண்டு திருமருகலை சேர்ந்த கிராமமக்கள் கலெக்டர் சுரேஷ்குமாரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது:- 

நாகை தாசில்தார் மூலம் திருமருகலில் உள்ள சீராளன் குளம் தூர்வார 2 முறை அனுமதி வழங்கப்பட்டன. ஆனால் குளம் தூர்வாரும் பணி நடைபெறாமல் 2 முறையும் தடுத்து நிறுத்தப்பட்டது. 3-வது முறையாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சீராளன் குளத்தின் கரையை கட்டி கொண்டிருந்தோம். அப்போது உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு நபர் தனது அண்ணனை கூட்டி  வந்து 100 லோடு மண் கேட்டனர். மேலும் நான் உதவி கலெக்டரிடம் வேலை பார்க்கிறேன். எனக்கு இலவசமாக மண் கொடுங்கள் என்று கேட்டார்.

அதற்கு நாங்கள் தாசில்தாரிடம் அனுமதி வாங்கி குளத்தை தூர்வாருகிறோம். இலவசமாக மண் கொடுக்க முடியாது என்று கூறினோம். அதற்கு அவர் மண் கொடுக்கவில்லை என்றால் குளம் தூர்வாரும் பணியை நிறுத்தி விடுவேன் என்று கூறி சென்றார். மறுநாள்  குளம் தூர்வாரும் பணியை நிறுத்திவிட்டார். எனவே, சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story