அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 9:18 PM GMT)

பழனி கொத்தனார் காலனியில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பழனி,

பழனி அருகே கோதமங்கலம் ஊராட்சியில் கொத்தனார் காலனி உள்ளது. இங்கு சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொத்தனார் காலனி யில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அப்பகுதி பெண்கள், ஆண்கள் என 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் தங்கள் பகுதியில் குடிநீர், கழிப்பிடம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கூறி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கூலித்தொழிலாளர்கள்

பழனி தாசில்தார் மூலம் இலவச வீட்டுமனை பெற்று கொத்தனார் காலனியில் குடியிருந்து வருகிறோம். மேலும் சிலருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் வெளி ஊரை சேர்ந்த சிலருக்கு பட்டா வழங்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. அதேபோல் எங்கள் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள். ஆனால் இங்கு கழிப்பிடம், குடிநீர், சத்துணவுக்கூடம் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட அலுவலக ஊழியர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story