தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகளில் தங்கம்- வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்த வீராங்கனைகள்


தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகளில் தங்கம்- வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்த வீராங்கனைகள்
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 5:16 PM GMT)

தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகளில் தங்கம், வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்த பெரம்பலூர் வீராங்கனைகளை மாவட்ட கலெக்டர் சாந்தா பாராட்டினார்.

பெரம்பலூர்,

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட மகாத்மா விளையாட்டு அரங்கத்தில் கடந்த 14, 15-ந் தேதிகளில் நடந்த தென்னிந்திய அளவிலான தடகள போட்டிகளில் தமிழக அணிக்காக பெரம்பலூர் மாவட்ட தடகள வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி 2 தங்கம், 2 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். இதில் 18 வயதிற்குட்பட்ட பிரிவில் ஈட்டி எறியும் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதியை சேர்ந்த பள்ளி மாணவி பிரியதர்‌ஷினி முதலிடமும், சுபா‌ஷினி 16-வயதிற்குட்பட்ட பிரிவில் 3 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி போட்டியில் முதலிடமும் பிடித்து தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். மேலும் 18-வயதிற்குட்பட்ட பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கல்லூரி மாணவி கிருத்திகா 3-ம் இடமும், 20-வயதிற்குட்பட்ட பிரிவில் கல்லூரி மாணவி பவானி 4X400 தொடர் ஓட்டப்போட்டியில் 3-ம் இடமும் பிடித்து வெண் கலப்பதக்கம் பெற்றனர்.

பாராட்டு

தென்னிந்திய அளவிலான மாநில இளையோர் தடகள போட்டிகளில் தங்கம், வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்து தமிழகத்திற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த விளையாட்டு விடுதியை சேர்ந்த பள்ளி மாணவிகளான பிரியதர்‌ஷினி, சுபா‌ஷினி மற்றும் கல்லூரி மாணவிகளான கிருத்திகா, பவானி ஆகியோரை நேரில் அழைத்து கலெக்டர் சாந்தா பாராட்டு தெரிவித்தார்.அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு, தடகள பயிற்சியாளர் கோகிலா மற்றும் விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி உடனிருந்தனர்.

Next Story