அரசு நிலத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதாக கரூர் பெண் தாசில்தார் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்


அரசு நிலத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதாக கரூர் பெண் தாசில்தார் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 19 Sep 2019 11:15 PM GMT (Updated: 19 Sep 2019 6:44 PM GMT)

கரூரில் அரசு நிலத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதாக பெண் தாசில்தார் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம், திருச்சி மாவட்டத்திலிருந்து கடந்த 1995-ம் ஆண்டு பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசு உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ஏற்படுத்துவதற்கு தாந்தோன்றிமலை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக அரசு நிலம் போக, தனியாருக்கு சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்தியது.

அதன் பின்னர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வந்த கலெக்டர் அலுவலகம், தாந்தோன்றிமலை பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நில எடுப்பு சட்ட பிரிவின் கீழ் இந்த நிலங்களை யாரும் வாங்கவோ விற்கவோ கூடாது என்று அறிவிக்கப்பட்டது.

3 பேர் பணியிடை நீக்கம்

இதற்கிடையே கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. எனினும் சிலர் உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் அந்த நிலத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதாக, கரூர் வருவாய் துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசு நிலத்தில் தனியாருக்கு பட்டா வழங்கியதாக கரூர் தாசில்தார் அமுதா, நிலஅளவீடு பிரிவின் வட்டதுணை ஆய்வாளர் சாகுல்ஹமீது, குறுவட்ட நில அளவையர் சித்ரா ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கரூர் தாசில்தார் அலுவலகத்தில் புதிய தாசில்தாராக அருள் என்பவர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

Next Story