மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 7:58 PM GMT)

கரூரில் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் நடந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள், தாந்தோன்றிமலை விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட கரூர் மண்டல பொதுமேலாளர் குணசேகரன் கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

விளையாட்டுக்கு வயது ஒரு தடையில்லை என்பதைபோல் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பலர் இந்த தடகள போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். இதில் 100, 200, 400, 800, 1,500 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தத்தி தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

ஆர்வத்துடன் விளையாடினர்

இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் வந்து போட்டியில் பங்கு கொண்டு ஆர்வத்துடன் விளையாடினர். அங்கு திடீரென யாரும் மயங்கினால் முதல் உதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. தடகள சங்கத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பரிசளிப்பு

அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் சிறப்பிடம் பெற்றவர்கள் திருச்சியில் வருகிற நவம்பர் மாதம் 16, 17-ந்தேதிகளில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இதில், தடகள சங்க செயலாளர் பாலு, தலைவர் அமுதா சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story