ராதாபுரம் அருகே, மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி - நண்பர் படுகாயம்


ராதாபுரம் அருகே, மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி - நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Sep 2019 10:30 PM GMT (Updated: 25 Sep 2019 11:01 PM GMT)

ராதாபுரம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பட்டதாரி வாலிபர் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

ராதாபுரம், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள மேலகள்ளிகுளத்தை சேர்ந்தவர் பவுல் செல்வன். அவருடைய மகன் கணேஷ் (வயது 23). இவர் பி.காம் முடித்துவிட்டு தற்போது வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார். அவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணி மகன் ரமணன் (21).

நேற்று முன்தினம் இரவு கணேஷ் தனது மோட்டார்சைக்கிளில் ரமணனை அழைத்துக் கொண்டு கும்பிளம்பாட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சவுந்திரபாண்டியபுரம் வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரமணன் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு கிடந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் யாரும் உதவிக்கு இல்லை.

நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த சென்றவர்கள் பார்த்து, ராதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரமணனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கணேஷின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து பற்றி ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story