அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்


அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 Sep 2019 11:00 PM GMT (Updated: 27 Sep 2019 5:50 PM GMT)

அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் குறுவை பருவத்தில் 37 ஆயிரத்து 167 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, 25 ஆயிரத்து 112 எக்டேரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. சம்பா பருவத்தில் இதுவரை நேரடி நெல் விதைப்பு மூலம் 6 ஆயிரத்து 16 எக்டேரில் சாகுபடி முடிந்துள்ளது மேலும் 25 ஆயிரத்து 140 எக்டேரில் சம்பா நடவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கான நாற்றாங்கால் 1,959 எக்டேரில் தயார் செய்யப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தொடர்ந்து நல்லபடியாக கிடைத்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு(2020-ம் ஆண்டு) குடிமராமத்து பணி மற்றும் சிறப்பு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆலோசிக்க வேண்டும். எந்தந்த பகுதிகளில் தூர்வார வேண்டும் என்பது குறித்து விவசாயிகள் மனு எழுதி அனுப்பலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசிய கருத்துக்கள் வருமாறு:-

தஞ்சை கண்ணன்: உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதகுகளை சரி செய்ய வேண்டும்.

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல்லை முழு மானியத்தில் வழங்க வேண்டும்.

புனல்வாசல் சவரிமுத்து: கஜா புயலில் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு பல விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. எனவே உடனடியாக தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

கோனேரிராஜபுரம் வீரராஜேந்திரன்: ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டும் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே நெல்லை விற்பனை செய்ய போதிய அளவு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும்.

கீழக்கோட்டை தங்கவேல்: கடைமடைக்கு இன்னும் தண்ணீர் சென்று சேரவில்லை. கிராமங்களில் உள்ள குளம், ஏரிகளுக்கும் தண்ணீர் சென்று சேரவில்லை. இதற்கு கரைக் காவலர்கள் இல்லாததே காரணமாகும்.தஞ்சை செந்தில்குமார்: குறுவை நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.அம்மையகரம் ரவிச்சந்தர: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு வடிகால்களை தூர்வார வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

Next Story