இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Sep 2019 10:45 PM GMT (Updated: 29 Sep 2019 3:14 AM GMT)

இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

குன்னூர்,

குன்னூர் அருகே பழைய அருவங்காடு நேரு நகரை சேர்ந்தவர் மாசிமலை. இவருடைய மனைவி முத்துலட்சுமி(வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாசிமலை இறந்துவிட்டார். இதனால் தனது 2 மகள்களுடன் முத்துலட்சுமி வாழ்ந்து வந்தார். அதில் மூத்த மகளான ஆனந்தி(22) என்பவர், தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெகதீ‌‌ஷ்(26) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்த ஆனந்தி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அதே வீட்டில் ஜெகதீ‌‌ஷ் இருந்ததாகவும், அதன்பிறகு அங்கிருந்து சென்று தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆனந்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் அருவங்காடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே ஆனந்தியின் தற்கொலைக்கு காரணமான ஜெகதீ‌‌ஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருவங்காடு போலீஸ் நிலையத்தை அவரது உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டனர். மேலும் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வெலிங்டன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் அங்கு விரைந்து வந்து, ஆனந்தியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story