கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு


கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 11:15 PM GMT (Updated: 1 Oct 2019 5:19 PM GMT)

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்குள் சிலர் போலி ஆவணங்கள் கொடுத்து செல்போன் சிம்கார்டுகள் வாங்கினார்கள். இதுகுறித்த புகார்களின் பேரில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வீரமணி, கண்ணன் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரூபேஸ் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர்கள் 3 பேர் மீதும் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி உமாமகேஸ்வரி வழக்கை விசாரித்தார். அப்போது ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அதன்பின்னர் மாவோயிஸ்டுகள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டுக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர்கள், கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 3 பேரும் சிறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story