வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2019 9:30 PM GMT (Updated: 1 Oct 2019 8:33 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடி அமைப்பது, வாக்குச்சாவடி இடமாற்றம், வாக்குச்சாவடி கட்டிட மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையம் 1,500-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை 2-ஆக பிரித்து புதிய வாக்குச்சாவடிகளை அமைத்திட உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,500-க்கு மேல் இருந்ததால் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி மையமும் பிரிக்கப்பட்டு புதிதாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 2 வாக்குச்சாவடி மையங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,596 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக, வாக்குச்சாவடி மையங்கள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடி பட்டியல் செம்மையாக வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story