டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகளுக்கு சிகிச்சை: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகளுக்கு சிகிச்சை: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 9:20 PM GMT)

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்த 24 பேருக்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காய்ச்சல் பிரிவு வார்டில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் ராமன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல்வேறு வார்டுகளில் ஆய்வு செய்த அவர், காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எத்தனை பேர்? அவர்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் எத்தனை நபர்கள்? என டாக்டர்களிடம் கேட்டார். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதுகுறித்து கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

44 பேருக்கு டெங்கு காய்ச்சல்

காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் தன்மை குறித்து நேரில் ஆய்வு செய்தேன். 182 நோயாளிகள் பல்வேறு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24 நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் 20 நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. மொத்தம் 44 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளான ‘ஆண்டி கார்பன்’ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுகாதாரப் பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை சுகாதாரத்துறையின் மூலமும், உள்ளாட்சி துறையின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்போது தீவிரமாக கண்காணித்து தற்போது நிலவும் பருவகால சூழ்நிலையில் நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மருத்துவ முகாம்கள்

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறதோ? அங்கு உடனடியாக சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், சேலம் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story