திருச்சி மத்திய சிறையில் திடீர் மோதல் வார்டரை தாக்கிய கைதிகளால் பரபரப்பு போலீசார் விசாரணை


திருச்சி மத்திய சிறையில் திடீர் மோதல் வார்டரை தாக்கிய கைதிகளால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Oct 2019 10:15 PM GMT (Updated: 6 Oct 2019 5:09 PM GMT)

திருச்சி மத்திய சிறையில் நடந்த திடீர் மோதலில் வார்டரை 3 கைதிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் 3 கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் வார்டர்களாக பணியாற்றி வருபவர்கள் புண்ணியமூர்த்தி மற்றும் திருமுருகானந்தம். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை திருச்சி சிறையில் பிளாக் எண் 6-ல் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதிகளான மதன்குமார், ஸ்ரீதரன் ஆகியோரை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வேறு பிளாக்கிற்கு மாற்றுவதற்காக அழைத்து சென்றனர்.

அப்போது அதே பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்த மற்ற தண்டனை கைதிகளான மதுரையை சேர்ந்த கார்த்திக் (வயது 32), முனியசாமி(29), சிவகங்கை காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் (37) ஆகியோர் கைதிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

வார்டர் மீது தாக்குதல்

அத்துடன், திடீரென வார்டர் புண்ணியமூர்த்தியை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, அவருடைய சட்டையை பிடித்து, அவரை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி புண்ணியமூர்த்தி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து திருச்சி மத்திய சிறை போலீஸ் ஏட்டு ரமேஷ் இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கார்த்திக், முனியசாமி, திருச்செல்வம் ஆகியோர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story