முதியோர் உதவித்தொகை வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


முதியோர் உதவித்தொகை வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:30 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

முதியோர் உதவித்தொகை வழங்க கோரி கிருஷ்ணகிரியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு வட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வெங்கடாசலம், மாது, மனோகரன், சுரேஷ்பாபு, இளையராணி, அருண், பெரியசாமி, முனியப்பன், ராஜேந்திரன், சண்முகம், சுப்பிரமணி, சின்னராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர் ராமசாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மதன், விவசாய சங்க வட்ட தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, 60 வயது முடிந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவதாகவும், அனைவருக்கும் வீட்டுமனை வழங்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் வெங்காயம், பூண்டு, மிளகாய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை விலை உயர்ந்தும், பொருளாதார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வேலை இழந்து கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். 60 வயது முடிந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். வீட்டுமனை பட்டா, 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி, முழு வேலையை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சேட்டு, லோகநாதன், மணிகண்டன், பிரகாஷ், ஜெய்குமார், இளவரசன், குணசேகரன், முத்துவேடி, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story