ஜோலார்பேட்டை அருகே, ஆன்லைன் பதிவில் இலவச வீட்டுமனை பட்டா இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்


ஜோலார்பேட்டை அருகே, ஆன்லைன் பதிவில் இலவச வீட்டுமனை பட்டா இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:30 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

ஆன்லைன் பதிவேட்டில் இலவச வீட்டுமனை இடம் பெறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தனர். கடந்த 2000-ம் ஆண்டில் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

மீதம் உள்ளவர்களுக்கு 2017-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா, சார் பதிவாளர் அலுவலகத்தில் சர்வே எண் போட்டு ஆன்லைன் மூலம் ஆய்வு செய்யும் போது இலவச வீட்டு மனை பட்டா பெற்ற பயனாளியின் பெயர் காட்டப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர் இலவச வீட்டுமனை பட்டா ஆன்லைனில் பதிவு வருவதற்கு நீங்கள் தாசில்தாரை பார்க்க வேண்டும் என அவர்களிடம் கூறியுள்ளார்.

அதன்படி அவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது கிராம நிர்வாக அலுவலரை பார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறி ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கொத்தூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் செல்ல முடியாமல் அங்கேயே நின்றது.

தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் தாமலேரிமுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் தற்போது வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா தமிழ்நாடு முழுவதும் கணினி மயம் ஆக்கப்படாமல் உள்ளது. எனவே கணினி மயமாக்கப்படும் போது உங்களுடைய பட்டாக்களும் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் எனவும், மேலும் தற்போது விடுபட்டுள்ள ஒரு சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story