சத்திரப்பட்டியில் பரிதாபம்: பின்னோக்கி வந்த லாரி மோதி 2 வயது குழந்தை பலி


சத்திரப்பட்டியில் பரிதாபம்: பின்னோக்கி வந்த லாரி மோதி 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 11 Oct 2019 10:00 PM GMT (Updated: 11 Oct 2019 8:24 PM GMT)

சத்திரப்பட்டியில் பின்னோக்கி வந்த லாரி மோதி 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

பழனி,

சத்திரப்பட்டியில் தனியார் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலம் கோப்பங்கன் பகுதியை சேர்ந்த தன்சிங் (வயது 33), அவரது மனைவி பத்மா (26) ஆகியோர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ராகுல்சிங் (2) என்ற குழந்தை இருந்தது. நேற்று பத்மா தனது குழந்தையை அந்த பகுதியில் விளையாட விட்டுவிட்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.

இதற்கிடையே அந்த சூளையில் இருந்து செங்கல்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை போடுவார்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவர் ஓட்டினார்.

அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ராகுல்சிங் லாரியின் பின் பகுதியில் நின்று கொண்டிருந்தான். இதை கவனிக்காமல் டிரைவர் லாரியை ஓட்டியதாக தெரிகிறது. இதனால் ராகுல்சிங் மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதில் ராகுல்சிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவலறிந்த சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறு முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story